ஸோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, சனாதன தர்மம், ஹிந்தி போன்ற விவகாரங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளை முன்வைக்காமல் திமுக பாஜவை எதிர்க்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது அறிக்கையில், “தமிழகம் ஏன் டிசிஎஸ் தரவு மைய முதலீட்டை இழந்தது?” என்று திமுக தலைவர் டிஆர்பி ராஜா எழுப்பிய கேள்வியை குறிப்பிட்டு, இத்தகைய பெரிய முதலீட்டு முடிவுகள் மூன்று மாதங்களில் எடுக்கப்படுவதில்லை; அதனால் விரிவான பதில் தேவைப்படும் என்றார்.
இந்தியா முழுவதும் பயணம் செய்யும் போது, திமுக தன்னை எதிர்மறையாக அணுகினாலும், பிராமணராகப் பிறந்ததற்காக தனிப்பட்ட தாக்குதல்கள் இருந்தாலும், ஏன் தமிழகத்திலேயே இருப்பதைத் தேர்வு செய்கிறீர்கள் என்று பலர் கேட்பதாக வேம்பு கூறினார். அதற்கு, தமிழகம் சிறந்த மாநிலம்; திமுக தமிழகத்தின் பரந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை; அந்த பரந்த சமூகம் ஸோகோவுக்கும் தன்னுக்கும் ஆதரவாக இருப்பதாக பதிலளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், திமுக அமைச்சர்கள் வட இந்தியர்களை “வடக்கன்கள்” என்று இழிவுபடுத்தி அழைத்தது, புலம்பெயர் தொழிலாளர்களை கேலி செய்தது, சனாதன தர்மத்தை “ஒழிப்போம்” என உதயநிதி பேசியது போன்றவை இந்தியாவின் பிற பகுதிகளில் கவனிக்கப்படாமல் போவதில்லை என்றார். நீட், நவோதயா பள்ளிகள், ஹிந்தி உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்க்கும் மாநிலமாக தமிழகத்தை திமுக முன்னிறுத்தியதாகவும், ஆனால் அண்டை தென் மாநிலங்கள் நடைமுறைக்கு ஏற்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
பாஜவை எதிர்த்தாலும், வட இந்தியர்களுக்கு எதிரான மறைமுகப் பிரிவினைவாதப் போக்கை கைவிட்டு ஆக்கபூர்வமான அணுகுமுறையை நடிகர் விஜய் மேற்கொள்வதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், வட இந்தியாவில் விஜய் பிரபலமாக இருப்பதையும் குறிப்பிட்டார். தமிழக நலனை உண்மையாகவே விரும்பினால் “வடக்கு சார்ந்த அனைத்தின் மீதும்” உள்ள கண்மூடித்தனமான வெறுப்பை விட்டு, வெறுப்புப் பேச்சின்றி பாஜவை எதிர்க்க முடியும் என்றும் வேம்பு தெரிவித்தார்.





