தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கைத் துறை (CAG) அறிக்கையில், தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதன் காரணமாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ரூ.9,576 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, 2023 மார்ச் நிலவரத்தில் தமிழகத்தின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் 35,036 மெகாவாட்டாக இருந்தாலும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சொந்த நிறுவுத் திறன் 7,175 மெகாவாட் மட்டுமே இருந்தது. இதனால் வெளிப்புற கொள்முதலின் சார்பு அதிகரித்து ஆண்டுதோறும் இழப்பு ஏற்பட்டதாகவும், 2023 மார்ச் வரை மொத்த இழப்பு ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், முறையான பராமரிப்பின்மையால் அனல் மின் நிலையங்களில் மின் தடைகள் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிலை உருவாகி ரூ.9,576 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டதாகவும் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தில் குறைவான செயல் திறன் மற்றும் சாம்பல் கையாளும் அமைப்பு சரியாக செயல்படாததால் ரூ.131.58 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலக்கரி வழங்கலில் பற்றாக்குறை மற்றும் அதை சரிசெய்ய அதிக விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்ததால் ரூ.3,941 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டதாகவும், 2001 முதல் 2024 வரை நிலக்கரி பற்றாக்குறையை கணக்கிடவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது. நிலையான விலை முறையிலிருந்து மாறும் விலை முறைக்கு மாற தவறியதால் ரூ.1,244.10 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டதாகவும், குறைந்த தர நிலக்கரியை ஏற்றுக் கொண்டதால் கூடுதல் நிலக்கரி பயன்படுத்த வேண்டி ரூ.1,563 கோடி தவிர்க்கக்கூடிய செலவு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் திட்டத்தில் ரூ.2,020 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பயனில்லாமல் செயலற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயு மின் நிலையங்கள் வழக்கத்தை விட அதிக எரிவாயு பயன்படுத்தியதால் ரூ.296 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.