தமிழகத்தில் திருட்டு, செயின் பறிப்பு, கொள்ளை, வழிப்பறி போன்ற சொத்துச் சார்ந்த குற்ற வழக்குகளைத் துப்புத் துலக்குவதில் போலீசார் சிரமம் எதிர்கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மாநிலத்தில் 4,013 திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் வீடு புகுந்து திருடுதல், செயின் பறிப்பு, கொள்ளையடித்தல், வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளில் 2,800க்கும் மேற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மொத்தம் 13,924 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 6,981 வழக்குகளில் இன்னும் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் விசாரணை தொடர்கிறது.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஆகஸ்ட் வரை 6,943 வழக்குகளில் விசாரணை முடித்து குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மீதமுள்ள வழக்குகள் தொடர் விசாரணையில் உள்ளதாகவும், தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறினர்.




