
மகளிர் இடஒதுக்கீடு சட்டம் கவனம் திருப்பவே: பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை முன்னிறுத்தி முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2023 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையும் முடிந்த பிறகே அது அமலுக்கு வரும் என அரசு தெரிவித்திருந்தது. தற்போதைய கணிப்புப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் 2027ல் தான் வெளியாகும் நிலையில், 2029 லோக்சபா தேர்தலுக்கு முன் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.


































