
உச்ச நீதிமன்றம்: பிற மதத்திற்கு மாறினால் பட்டியல் இன அந்தஸ்து இழப்பு
ஹிந்து மதத்திலிருந்து சீக்கியம் அல்லது பவுத்தம் தவிர மற்ற மதங்களுக்கு மாறுபவர்கள், பட்டியல் இன (எஸ்.சி.) அந்தஸ்தை கோர முடியாது; மாற்றம் நிகழும் தருணத்திலேயே அந்த அந்தஸ்து இழக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த சின்தடா ஆனந்த் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி போதகராக பணியாற்றி வருகிறார். தன்னை ஜாதி அடிப்படையில் துன்புறுத்தியதாக கூறி, ராமிரெட்டி என்பவர்மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதால் ஆனந்த் பட்டியல் இன அந்தஸ்தை இழந்துவிட்டார்; ஆகவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பாதுகாப்பை கோர முடியாது என ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு 1950ஆம் ஆண்டு பட்டியல் இனங்கள் தொடர்பான அரசியல் சாசன உத்தரவை மேற்கோள் காட்டி, உயர் நீதிமன்ற முடிவை உறுதி செய்தது.


































