
வெயில் பாதிப்புக்கு பாராசிட்டமால், ஆஸ்பிரின் சுயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னை: வெயிலின் தீவிரத்தால் உடல் அதிகமாக சூடாகும் போது, சுயமாக பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டாம்; இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம் என பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். இதை மீறி வெப்பநிலை உயரும்போது தலைவலி, உடல்சோர்வு, தலைச்சுற்றல், சதைபிடிப்பு, மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்; இது வெயில் தொடர்பான உடல்நல பாதிப்பை காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி கூறுகையில், இத்தகைய சூழலில் மருந்துகளை சுயமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றார். பாதிக்கப்பட்டவரின் உடலை நீரில் நனைத்த துணியால் துடைத்து, விசிறி விடுவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம்; மேலும் குளிர்ந்த நீர், இளநீர் அல்லது மோர் பருகக் கொடுத்து, குளிர்ந்த இடத்தில் அமர வைப்பது நல்லது என்றார்.

































