
சமையல் செய்யாததால் மனைவியை விவாகரத்து செய்ய முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்
சமையல் செய்யவில்லை அல்லது வீட்டு வேலைகளைச் செய்யவில்லை என்பதற்காக மட்டும் மனைவியை விவாகரத்து செய்ய முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனைவியை பணிப்பெண்ணாகக் கருதக் கூடாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. 2002-ல் திருமணம் செய்துகொண்ட தம்பதியில், கணவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். சிஏ முடித்துள்ள அவர், மனைவி சமையல் செய்ய முடியவில்லை, முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார், சொல் பேச்சு கேட்கவில்லை, வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்யவில்லை; இதனால் தனக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்றும், இது திருமணச் சட்டத்தின் கீழ் ‘கொடுமை’ எனக் கருதப்பட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு மனைவி தரப்பில், பாத்திரம் கழுவுதல், சுத்தம் செய்தல், சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் தன்னைச் செய்ய வைத்ததாகவும், மீதமான உணவையும் உண்ண கட்டாயப்படுத்தியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


































