
சர்வர் கோளாறால் பதிவுத்துறை இணையதளத்தில் தினமும் ‘மன்னிக்கவும்’
சென்னை: சர்வர் கோளாறு நீடிப்பதால், தமிழ்நாடு பதிவுத்துறை இணையதளத்தில் பல பகுதிகளில் ‘மன்னிக்கவும்’ என்ற செய்தி தொடர்ந்து தோன்றுகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர். சொத்து விற்பனை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணப் பதிவை எளிமைப்படுத்த ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு, ஜனவரி 22 முதல் இணையதளம் அதன்மூலம் செயல்படத் தொடங்கியது. முதல்கட்டமாக 18 புதிய வசதிகள் அறிமுகமாகின; சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல் விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றது. ஆனால், அறிமுகமாகி இரண்டு மாதங்கள் கடந்தும், இந்த வசதிகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. சாதாரண தகவல்களைக் கூட பார்க்க முடியாத நிலை இருப்பதாகவும், வில்லங்க விவரங்கள் பார்க்க முயன்றால் முதல் கட்டத்தில் தகவல் உள்ளீடு செய்த பிறகும் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாமல் தடை ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


































