
அ.தி.மு.க. இரு அணிகளும் பலம் சேர்க்க தீவிரம்; எம்.எல்.ஏ.க்கள் பேரம் உயர்வு
சென்னை: அ.தி.மு.க.வில் பிரிந்து செயல்படும் இரு அணிகளும் தங்கள் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க தீவிரமாக முயற்சி மேற்கொள்வதால், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பேரத்தை உயர்த்தி வருகின்றனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான மோதலுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏ.க்களும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக செயல்படுகின்றனர். சட்டசபையில் த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபித்தாலும், வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த நேரத்திலும் ஆதரவை வாபஸ் பெற வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின. அதனால் முன்கூட்டியே அ.தி.மு.க. தரப்பில் இருந்து ஆதரவு வழங்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக அமைச்சர் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் வழங்க த.வெ.க. ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


































