
2025-26ல் நாடு முழுவதும் 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடக்கம்: மத்திய அரசு
2025-26 கல்வியாண்டில் நாடு முழுவதும் 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு ராஜ்யசபாவுக்கு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் எழுத்துப்பூர்வ பதிலில், தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) தகவல்களை மேற்கோள் காட்டி, அதே கல்வியாண்டில் 11,682 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் 8,967 முதுநிலை மருத்துவ இடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைத்தல் மற்றும் இளங்கலை/முதுகலை இடங்களை அதிகரித்தல் தொடர்பாக மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்களிடமிருந்து NMC ஆண்டுதோறும் ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஆய்வு, மதிப்பீடு முடிந்த பின் அனுமதி அல்லது மறுப்பு கடிதம் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


































