
ஈரான் போர் தாக்கம்: பாகிஸ்தானில் பெட்ரோல் ரூ.321; டீசல் ரூ.335
இஸ்லாமாபாத்: ஈரானைச் சுற்றியுள்ள மோதல் சூழல் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்த நிலையில், பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதாக கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி கடற்பாதையை ஈரான் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற பயம் பரவி, மக்கள் ஒரே நேரத்தில் பெட்ரோல் நிலையங்களுக்கு குவிந்தனர். இந்த சூழலை பயன்படுத்தி சில பெட்ரோல் பங்குகள் செயற்கையாக தட்டுப்பாடு உருவாக்கி எரிபொருளை பதுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல நகரங்களில் மக்கள் அவதியடைந்ததுடன், அரசின் மீது அதிருப்தியும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.


































