
மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் கோவை, மதுரை மெட்ரோக்கு திருப்புமுனை: அதிகாரிகள்
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு அடுத்ததாக கோவை, மதுரையில் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) CMRL தயாரித்து மாநில அரசிடம் வழங்கியது. பின்னர் மாநில அரசு அவற்றை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. மதுரை திட்டத்தின் மதிப்பு ₹11,360 கோடி; கோவை திட்டத்தின் மதிப்பு ₹10,740 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் தொகை அளவுகோலை காரணமாகக் காட்டி மத்திய அரசு கடந்த நவம்பரில் அறிக்கைகளை திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் கூறினர். திருத்தங்களுடன் கடந்த மே மாதம் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டாலும், ஜூலை 25 அன்று மீண்டும் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மெட்ரோக்கு பதிலாக பிரத்யேக பஸ் வழித்தடங்களுடன் ‘பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்’ (BRTS) மேம்படுத்தலாம் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டது.


































