
மும்பையில் ரூ.1,745 கோடி கோகைன் பறிமுதல்; என்சிபி அதிகாரிகளுக்கு அமித் ஷா பாராட்டு
மும்பையில் ரூ.1,745 கோடி மதிப்புள்ள 349 கிலோ உயர்தர கோகைன் போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பறிமுதல் நடவடிக்கையால், இந்தியாவுக்குள் பெருமளவில் போதைப்பொருள் கொண்டு வர முயன்றதாக கூறப்படும் சர்வதேச கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பெரிய அளவிலான நெட்வொர்க்கையும் கண்டறிய முடிந்ததாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், போதைப்பொருள் கும்பல்களை ஒழிப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், சிறிய அளவிலான கடத்தல் வழக்குகளை தொடர்ந்து கண்காணித்ததன் மூலம் பெரிய நெட்வொர்க் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


































