வளைகுடா பதற்றம்: டெல்லியில் கட்டுப்பாட்டு அறை; உதவி எண்கள் அறிவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் தொடர்பான மோதல்கள் தீவிரமடைந்து ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுவதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு நிலைமை பதற்றமாக உள்ள நிலையில், அங்கு வாழும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் வீட்டுக்குள் இருக்கவும் இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை நினைவூட்டினார். வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறைக்கு, சம்பந்தப்பட்ட நாடுகளில் நிகழ்வுகளை நெருக்கமாக கண்காணித்து அங்குள்ள தமிழர் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் உடனடி உதவி வழங்க அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





