
இந்திய துறைமுகங்கள் மூலம் ஈரான் மீது தாக்குதலா? மத்திய வெளியுறவுத்துறை மறுப்பு
புதுடில்லி: ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்தும் என்ற தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) மறுத்துள்ளது. அமெரிக்க முன்னாள் ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் ஊடக பேட்டியில், அமெரிக்கா இந்தியாவையும் இந்தியத் துறைமுகங்களையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறியதாக வெளியான கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு நடத்திய ஆய்வில், அந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவிக்கப்பட்டது. எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்தி அமெரிக்க கப்பற்படை ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என கூறப்படும் செய்தி “ஆதாரமற்ற, ஜோடிக்கப்பட்ட” தகவல் என அமைச்சகம் குறிப்பிட்டது.


































