
இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளி தடை மே 24 வரை நீட்டிப்பு
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த முடியாத வகையில் விதிக்கப்பட்ட தடையை மே 24 வரை நீட்டிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஜம்மு–காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 24 முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அந்நாடு தடை விதித்தது. இதற்கு பதிலடியாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 30 முதல் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது. பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் விமானப் பணியாளர்களுக்காக வெளியிட்ட அறிவிப்பில், இந்திய விமானங்கள் மற்றும் இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் அல்லது குத்தகைக்கு எடுத்த விமானங்கள், ராணுவ விமானங்கள் உள்ளிட்டவை பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


































