
சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டு: மேலும் 5 அத்தியாவசிய துறைகளுக்கு அனுமதி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டளிக்கும் தகுதி விரிவாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தீயணைப்பு, மின்சாரம் உள்ளிட்ட மேலும் ஐந்து துறைகளில் பணியாற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் தபால் ஓட்டின் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டளிக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக கமிஷன் கூறியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான ஐந்து நாட்களுக்குள், ‘12டி’ படிவத்தை ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வகை வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று ஓட்டுகளை சேகரிக்கும் குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாக்காளர்கள், தங்கள் துறைகளில் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் வழியாக தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கலாம். தீயணைப்பு, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் சேவை, விமான போக்குவரத்து, அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்டவை இந்த வசதிக்குள் வருகின்றன.

































