
ஹார்முஸ் வழியாக எண்ணெய் கப்பல்களுக்கு யுவான் நிபந்தனை; ஈரான் பரிசீலனை
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு புதிய நிபந்தனை ஒன்றை ஈரான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன யுவான் கரன்சியில் எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கும் திட்டம் குறித்து பேசப்படுவதாக கூறப்படுகிறது. மேற்கு ஆசிய நாடான ஈரான், இந்த முக்கிய கடல் பாதையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், அனுமதியின்றி செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்குவோம் எனவும் எச்சரித்துள்ளது. தற்போது இந்த பாதை முடங்கியுள்ளதால் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக எரிசக்தி வினியோகத்தின் சுமார் 20 சதவீதம் இந்த கடல் வழித்தடம் மூலம் நடைபெறுகிறது. ஹார்முஸ் வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வினியோகத் தொடரிலும் பாதிப்பு ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ளது.


































