
ஈரான் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனிக்கு ‘உயிருக்கு உத்தரவாதம் இல்லை’: நெதன்யாகு
ஈரானின் புதிய ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமேனியின் உயிருக்கு “உத்தரவாதம் இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது, இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் அதிகரிக்கும் சூழலில் கடுமையான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. ஜெருசலேமில் பேசிய நெதன்யாகு, ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு நடவடிக்கை எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது என்றும், இஸ்ரேல் எப்போதையும் விட வலிமையாக உள்ளது என்றும் கூறினார். ஈரான் மக்கள் “கொடுங்கோல் ஆட்சியை” அகற்றுவதற்கான சூழலை உருவாக்குவதற்காகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் செயல்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். மேலும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் மற்றும் பாசிஜ் படைகள் மீது தெருக்களிலும் சோதனைச் சாவடிகளிலும் பலத்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும், நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெறுகின்றன என்றும் கூறினார்.


































