
விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்பு வரவேற்கத்தக்கது: மயில்சாமி அண்ணாதுரை
விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்கேற்பை அனுமதித்த மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ முன்னாள் தலைவரும் தமிழக அரசின் பாடத்திட்ட வழிகாட்டு குழுத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரோ பல்வேறு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி வரும் நிலையில், தற்போது மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக கூறினார். மேலும் குலசேகரப்பட்டினத்தில் ஏவுகணைகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்புப் பணியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதுவரை மத்திய அரசு மற்றும் தொடர்புடைய அமைப்புகள் மேற்கொண்டிருந்த விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணை தயாரிப்பு பணிகளில் இனி தனியார் பங்களிப்பும் இடம்பெற முடியும் என்றார்.


































