
நேபாளத்தில் தேசிய சுதந்திர கட்சி ஆட்சி அமைக்கிறது; 35 வயது ராப் பாடகர் பிரதமராகிறார்
காத்மாண்டு: நேபாளத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில், 35 வயதான பாலேந்திர ஷா தலைமையிலான தேசிய சுதந்திர கட்சி (ஆர்.எஸ்.பி.) தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அடுத்த ஆட்சியை அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ல் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஊழல், வேலைவாய்ப்பின்மை, அரசியல் வாரிசுகளின் சொகுசு வாழ்க்கை போன்ற நீண்டகால அதிருப்திகளுடன் இது இணைந்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்களாகவே ஒருங்கிணைந்து போராட்டங்களை முன்னெடுத்தனர். தலைநகர் காத்மாண்டுவில் மைதிகர் மண்டலா பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்தினர். போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்ட நிலையில், மோதல் வெடித்து வன்முறையாக மாறியது. அரசு கட்டடங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் தீக்கிரையானதாகவும், வன்முறையை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 76 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.


































