
தரூருக்கு ஆதரவு தெரிவித்ததால் சோனியா குடும்பம் சந்திக்கவில்லை: அய்யர் குற்றச்சாட்டு
புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் மற்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் இடையே வெளிநாட்டு கொள்கை, சித்தாந்தம் தொடர்பான கருத்து மோதல் கடிதங்கள் வழியாக வெளிப்படையாக உருவெடுத்துள்ளது. ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்கா இடையிலான பதற்றம் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் தரூர் தெரிவித்த கருத்துகளை விமர்சித்து தான் கடிதம் எழுதியதாக அய்யர் கூறினார். அதில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தரூருக்கு வாக்களித்ததாகவும், அவர் தோல்வியடைந்த பின்னரும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தரூருக்கு “மரியாதையான இடம்” வழங்க வேண்டும் என்றும், போட்டியிடும் அவரது ஜனநாயக உரிமையை மதிக்க வேண்டும் என்றும் வாதிட்டதாகவும் குறிப்பிட்டார். அந்த ஆதரவின் தொடர்ச்சியாகவே சோனியா குடும்பத்தினரும் கார்கேவும் தன்னை சந்திக்க மறுத்ததாக அய்யர் குற்றம்சாட்டினார்; தற்போது அந்த ஆதரவுக்காக வருந்துவதாகவும் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவை விமர்சிப்பதில் ஜெய்சங்கர் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக தரூர் கூறியதுடன் தாம் ஒத்துப்போகவில்லை என்றும், பார்லிமென்ட் நிலைக்குழு தலைவராக உள்ள தரூர் வெளிநாட்டு கொள்கை குறித்து தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பது அந்தப் பதவியின் மதிப்பை குறைக்கும் என்றும் கூறினார்.

































