
வினியோக நெருக்கடி: பிரிட்டனில் இரண்டு நாளில் எல்.என்.ஜி. தீரும் அபாயம்
லண்டன்: பிரிட்டனில் எரிவாயு வினியோக நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், எல்.என்.ஜி. (இயற்கை திரவ எரிவாயு) இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலும் தீர்ந்து போகும் அபாயம் இருப்பதாக தேசிய எரிவாயு நிறுவனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேற்காசியாவில் ஈரான் தொடர்பான போர் சூழல் காரணமாக உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு உருவாகும் அச்சம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல்களால் சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் சேதமடைந்து உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் விளைவாக எல்.என்.ஜி. டேங்கர்கள் ஐரோப்பாவுக்கு பதிலாக ஆசியாவுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகள் அதிக விலை கொடுத்து எரிவாயு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டனின் மற்ற எரிவாயு சேமிப்பு சுமார் 12 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாகவும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 90 முதல் 100 நாட்களுக்கு தேவையான அளவு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

































