
கீமோதெரபி மருந்து தட்டுப்பாடு: மாற்று மருந்துகள் பயன்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் சில முக்கிய புற்றுநோய் கீமோதெரபி மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நோயாளியின் உடல் நிலை மற்றும் புற்றுநோய் தன்மைக்கு ஏற்ப மாற்று மருந்துகளை பயன்படுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மார்பக, குடல் மற்றும் ஜீரண மண்டல புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ரத்த நாளங்கள் வழியாக கூட்டு கீமோதெரபி மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவ்வகை சிகிச்சை கலவைகளில் ‘சிஸ்பிளாட்டின்’, ‘கார்போபிளாட்டின்’, ‘ஆக்சலிபிளாட்டின்’ போன்ற பிளாட்டினம் அடிப்படையிலான மருந்துகளில் ஒன்று இடம்பெறுவது வழக்கம். இந்த மருந்துகளும் அவற்றின் மூலப் பொருட்களும் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்கா–ஈரான் போர் சூழல் காரணமாக பிளாட்டினம் மீதான வரியும் விலையும் உயர்ந்ததுடன், ஹார்முஸ் நீரிணை வழியாக மருந்து மூலப்பொருட்கள் இறக்குமதியும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

































