
அரபிக் கல்லூரி பெயரில் வசூல்: இளைஞர்களிடம் தீவிரவாத கருத்துகள் பரப்ப நிதி பயன்படுத்தியதாக ED
சென்னை: சென்னை மற்றும் கோவையில் இயங்கும் அரபிக் கல்லூரிகளுக்காக திரட்டப்பட்ட நிதி, இளைஞர்களிடம் தீவிரவாத கருத்துக்களைப் பரப்ப பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத் துறை (ED) விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது. இந்த விவகாரம், 2022 அக்டோபர் 23 அன்று கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையது. அந்த தாக்குதலில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஜமேஷா முபீன் உயிரிழந்தார். சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரித்து வரும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் குறித்து ED விசாரணை நடத்தி வருகிறது. ED வெளியிட்ட தகவலின்படி, ஜமேஷா முபீன் இறப்பதற்கு முன் ஐ.எஸ். அமைப்புக்கு விசுவாசப் பிரமாணம் செய்திருந்தது உறுதியாகியுள்ளது. மேலும், பயங்கரவாத பிரசாரம் செய்ததாக கூறப்படும் முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில், முபீன் மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும் ED தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேர், கோவை அரபிக் கல்லூரி நிறுவனர் என குறிப்பிடப்படும் ஜமீல் பாஷாவின் மாணவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.


































