
சைபர் மோசடிகளுக்கான புதிய தளமாக இலங்கை மாறுகிறது
கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் சைபர் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாகியுள்ள நிலையில், அந்த வலையங்கள் புதிய தளமாக இலங்கையைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு வேலை எனக் கூறி இந்திய இளைஞர்களை அழைத்து சென்று ஏமாற்றிய சம்பவங்களும் குறிப்பிடப்படுகின்றன. அங்கு சென்றவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களை சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு பலரை மீட்டு தாயகம் அழைத்து வந்துள்ளது. அமெரிக்க பார்லிமென்ட் குழு கடந்தாண்டு வெளியிட்ட அறிக்கையில், பல நாடுகளின் அழுத்தம் அதிகரிக்கும் போது மோசடி குழுக்கள் பலவீனமான விசாரணை அமைப்புகள் இருந்தாலும் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு கொண்ட நாடுகளுக்கு இடம்பெயர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் விசா இல்லாத பயணம், வாடகைக்கு எளிதில் கிடைக்கும் கட்டட வசதி, வலுவான தொலைத்தொடர்பு இணைப்பு, அறியப்பட்ட பணபரிமாற்ற வழிகள் மற்றும் சிம்கார்டுகள் எளிதில் கிடைப்பது போன்ற காரணங்கள் மோசடியாளர்களுக்கு சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது.


































