
கேரள போதை வழக்கு: 3 ஆசிரியைகள் கைது; சர்வதேச கும்பல் தொடர்பு விசாரணை
திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியைகளுக்கு, மேற்காசிய நாட்டைத் தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பு இருந்ததாக சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி.) தெரிவித்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்ததாக கூறப்படும் நிலையில், மாநில அரசு “ஆப்பரேஷன் துாபான்” என்ற நடவடிக்கையை தொடங்கியுள்ள சூழலில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகள் கூறுகையில், சமீபத்திய சோதனையில் ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், மேற்காசிய நாட்டைச் சேர்ந்த ஒருவரின் எண்ணை தொடர்பு கொண்டு போதைப்பொருள் கேட்டதாகவும், அந்த நபர் அனுப்பிய க்யூ.ஆர். குறியீடு மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


































