
இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் நிறைவு; தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகள்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஏப்ரல் 21 அன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. ஏப்ரல் 23 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்குப் பிறகு பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்தவும், அதில் பங்கேற்கவும் கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் தொடர்பான எந்த உள்ளடக்கத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்ளிட்ட அனைத்து மின்னணு தகவல் தொடர்பும் இதன் கீழ் வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.


































