
குழந்தைகள் பாக்கெட் உணவுகளில் சர்க்கரை அளவை முன்பக்கத்தில் தெளிவாக காட்ட பார்லி. குழு பரிந்துரை
குழந்தைகளுக்கான பாக்கெட் உணவுகளில் சர்க்கரை அளவை முன்பக்கத்தில் தெளிவாகக் காட்டும் ஊட்டச்சத்து குறியீட்டு விதிகளை விரைவில் அமல்படுத்த வேண்டும் என, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.-க்கு நுகர்வோர் விவகாரங்களுக்கான பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. குழந்தைகளுக்கான பல பாக்கெட் உணவுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், எவ்வளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தற்போது எளிமையான முன்பக்க தகவல் முறை இல்லை என குழு குறிப்பிட்டுள்ளது. தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்த குழு, அனுமதிக்கப்பட்ட வரம்பை நிர்ணயிப்பதோடு மட்டும் நிற்காமல், நுகர்வோருக்கு தெளிவான தகவல் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில் சர்க்கரை அளவை கட்டாயமாக வகைப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.


































