
கோவை விமான நிலைய விரிவாக்க தாமதத்திற்கு தி.மு.க. அரசு காரணம்: பா.ஜ. வேட்பாளர் முருகன்
அவிநாசி தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகன், தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நேற்று அன்னூர் பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அப்போது முட்டை கோழிப் பண்ணை உரிமையாளர்கள், போர் சூழ்நிலை காரணமாக முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அன்னூர் வட்டாரத்தில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் மக்காச்சோளம் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முருகன், அன்னூர் பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என்றும், இப்பகுதியிலிருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு நேந்திரன் வாழை மற்றும் முட்டை ஏற்றுமதி செய்ய தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார். மக்காச்சோளத்திற்கு கட்டுப்படியாகும் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


































