
அமெரிக்க ஆணைய அறிக்கை பாரபட்சம்: 275 ஓய்வு பெற்றோர் கடும் கண்டனம்
புதுடில்லி: அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் (USCIRF) வெளியிட்ட அறிக்கை “உள்நோக்கம் கொண்டது” என்றும் “பாரபட்சமானது” என்றும் 275 ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் கூட்டறிக்கையில் கடுமையாக கண்டித்துள்ளனர். உலகளவில் மத சுதந்திர நிலையை கண்காணித்து அமெரிக்க அரசுக்கு கொள்கை பரிந்துரைகள் வழங்கும் USCIRF, 2025-க்கான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்தியாவில் மத சுதந்திர மீறல்கள் நடக்கின்றன என கூறி, இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ‘ரா’ மற்றும் ஆர்.எஸ்.எஸ். மீது தடை விதிக்க வேண்டும் என பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஏற்கனவே இதை கண்டித்த நிலையில், கூட்டறிக்கையில் கையெழுத்திட்டவர்கள், இந்த அறிக்கை தவறான கணக்கீடுகளையும் அறிவுசார் குறைபாடுகளையும் வெளிப்படுத்துகிறது என கூறினர். ஆர்.எஸ்.எஸ். சொத்துகளை முடக்குவது, அதன் உறுப்பினர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது போன்ற பரிந்துரைகள் “பாரபட்சமானவை” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.


































