டாவின்சி சுய ஓவியம்: விரல் ரேகை ஆய்வால் ‘ஒரிஜினல்’ என உறுதி
லண்டன்: உரிமையாளர்களால் நீண்ட காலமாக ‘நகல்’ என கருதப்பட்ட லியோனார்டோ டாவின்சியின் சுய ஓவியம், அதில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று விரல் ரேகைகள் மூலம் தற்போது ‘ஒரிஜினல்’ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியின் கெய்ட்டி பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் லுயிஜி கப்பசோ தலைமையிலான குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள், ஓவியத்தில் உள்ள ரேகைகளை டாவின்சியின் மற்றொரு படைப்பில் காணப்பட்ட ரேகைகளுடன் ஒப்பிட்டு, ஒரே நபருக்குரியவை என முடிவு செய்தனர். இந்த உறுதிப்படுத்தலை வலுப்படுத்த ஓவிய வல்லுநர்கள், வரலாற்று ஆய்வாளர்களின் உதவியுடன் ரேடியோ கார்பன் டேட்டிங் மற்றும் பிக்மென்ட் ஆய்வு போன்ற அறிவியல் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனைகளின் அடிப்படையில், இந்த ஓவியம் 1478 முதல் 1520க்குள் வரையப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், ஓவியத்தில் டாவின்சியின் கையெழுத்தும் சில குறியீடுகளும் இருப்பதும் கண்டறியப்பட்டதாக குழு தெரிவித்தது.
































