
நுாற்றாண்டு விழாவில் கிளை விரிவாக்கம், மக்கள் தொடர்பு திட்டங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். கவனம்
சண்டிகர்: நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கிளைகளை விரிவுபடுத்தவும் மக்கள் தொடர்பு திட்டங்கள் வழியாக சமூகத்தில் இணைப்பை வலுப்படுத்தவும் ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் இணை பொதுச்செயலர் சி.ஆர். முகுந்த் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதிகள் சபை கூட்டம் ஹரியானாவில் நேற்று தொடங்கியது. சமல்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹோசபலே தொடக்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய முகுந்த், ‘கிருஹசம்பர்க்’ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளை சென்றடைந்ததாகவும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


































