
இன்ஜினியர்மீது சேறு ஊற்றிய வழக்கு: அமைச்சர் நிதேஷ் ரானேக்கு 1 மாத சிறை
தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) இன்ஜினியர்மீது சேறு ஊற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், மஹாராஷ்டிர மாநில அமைச்சர் நிதேஷ் ரானேக்கு சிந்துதுர்க் மாவட்ட நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கு 2019 ஜூலை 4 அன்று நடந்ததாக கூறப்படும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அன்றைய தினம் மும்பை–கோவா நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை கன்காவ்லியில் உள்ள காட் ஆற்றுப் பாலம் அருகே நிதேஷ் ரானே ஆய்வு செய்தபோது, NHAI துணை கோட்ட இன்ஜினியர் பிரகாஷ் ஷெடேகர் உடனிருந்தார். சாலைப் பணிகளின் தரம் குறித்து அதிருப்தியடைந்த ரானே, இன்ஜினியர்மீது சேறு ஊற்றியதுடன், பொதுமக்கள் முன்னிலையில் அதில் நடக்க வற்புறுத்தியதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

































