
கோவில் டெண்டர்களில் சிலரின் ஆதிக்கம்: விதிமுறைகள் மாற்ற அமைச்சர் உத்தரவு
மதுரை: அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில், ஒரே சிலர் நீண்ட காலமாக தொடர்ந்து டெண்டர் எடுப்பதைத் தவிர்க்க டெண்டர் விதிமுறைகளை திருத்த வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 44,000 கோவில்கள் உள்ளன. அதிக வருவாய் தரும் கோவில்களிலும் அடுத்த நிலை கோவில்களிலும் பூ, பழம் விற்பனை, காலணி பாதுகாப்பு, பார்க்கிங் போன்ற சேவைகளுக்காக கோவில் நிர்வாகம் டெண்டர் விடுவதன் மூலம் வருவாய் ஈட்டுகிறது. இந்த டெண்டர்களை அரசியல் பின்னணியுடன் சிலர் மட்டுமே தொடர்ந்து எடுத்து வருவதாகவும், கோவில் நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்டணங்களை உயர்த்தி வசூலிப்பதாகவும் புகார்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசித்த அமைச்சர், தகுதியானவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தினார்.


































