
சபரிமலை விசாரணை: மத நடைமுறைகள் கேள்விக்குள்ளானால் என்ன ஆகும்? உச்ச நீதிமன்றம்
சபரிமலை தொடர்பான சீராய்வு மனுக்கள் அடிப்படையில் நடைபெறும் விசாரணையில், மத நடைமுறைகளை தொடர்ந்து அரசியல் சாசன நீதிமன்றங்களின் முன் கேள்விக்குட்படுத்தத் தொடங்கினால் இந்திய சமூகத்துடன் பின்னிப் பிணைந்துள்ள மதத்தின் நிலை என்ன ஆகும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மத சுதந்திரத்தின் எல்லைகள் உள்ளிட்ட பரந்த கேள்விகளை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆராய்ந்து வருகிறது; விசாரணை 14வது நாளை எட்டியுள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என 2018ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் காரணமாக தற்போது இந்த அரசியல் சாசன அமர்வு விசாரணை நடைபெறுகிறது.


































