
போர் நீடித்தால் முக்கிய ஏவுகணை கையிருப்பு குறையலாம்: பென்டகன் எச்சரிக்கை
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் ஐந்தாவது நாளை கடந்துள்ள நிலையில், போர் மேலும் நீடித்தால் அமெரிக்காவின் முக்கிய ஏவுகணை கையிருப்பில் அழுத்தம் உருவாகலாம் என பென்டகன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் முக்கிய படை பிரிவு தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கி வருகிறது. போர் 4 முதல் 5 வாரங்கள் நீடிக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தாலும், கையிருப்பு குறைவு அதற்கு முன்பே தோன்றக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


































